

சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கி தி.மு.க. ஆட்சியின்போது சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், நெல்லையைச் சேர்ந்த வக்கீல் வெங்கடாஜலபதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இந்த சட்டத்துக்கு இடைக்காலத்தடை விதித்தது.
இந்த தடையை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தடையை நீக்கியதுடன், பிரதான வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, இறுதி விசாரணைக்காக வருகிற ஜூலை 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.