

சென்னை,
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே கேரிக்கையை வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி, உள்ளிட்டேரும் வழக்கு தெடர்ந்தனர்.
இந்த வழக்கில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி 11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர். இதனை எதிர்த்து திமுக எம்எல்ஏ சக்கரபாணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது எனவும் அந்த விவகாரத்தில் அவரே முடிவெடுப்பார் என்று நம்புவதாகவும் கூறி வழக்கை முடித்து வைத்தது. இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்குகள் பதிலளிக்க சபாநாயகர் உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோரினார். சபாநாயகர் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்ற அறிவுரைபடி நாளை விசாரணை நடைபெற உள்ளது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலமாக சபாநாயகர் தனபால் விசாரிக்கிறார்.