சென்னை குளிர்சாதன ரெயில் சேவை அதிகரிப்பு


சென்னை குளிர்சாதன ரெயில் சேவை அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 April 2025 8:25 PM IST (Updated: 29 April 2025 8:46 PM IST)
t-max-icont-min-icon

பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

சென்னை ரெயில்வே கோட்டத்தில் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரெயில்களை இயக்க வேண்டுமென தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.இதனை ஏற்று பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரெயில் தயாரிப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கியது. கடந்த ஜனவரி மாதம் பணிகள் முடிந்து மார்ச் மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில் திருப்தி ஏற்பட்டதால் ஏ.சி. மின்சார ரெயில் ஏப்.19-ம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கியது. மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் 1,116 பேர் அமர்ந்தும், 3,796 பேர் நின்று செல்லும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில் சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர் மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.இந்த ரெயிலில் தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமரா, பயணிகள் தகவல் அமைப்பு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்களும் இயக்கப்படுகிறது. இதுபோன்று சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே வழக்கமாக இயக்கப்படும் மின்சார ரெயில் பாதையில் ஏசி மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. இனி தினமும் ரெயில் இயக்கப்படும்.

இந்த ரெயில் சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.இந்நிலையில், ரெயிலின் நேரம் மற்றும் இயக்கம் குறித்து பயணிகள் 63747 13251 எனும் 'வாட்ஸ்ஆப்' எண்ணில் கருத்து தெரிவிக்கலாம் என்று முன்னதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பயணிகள் அளித்த கருத்துகளின் அடிப்படையில், ரெயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில்கள் இயக்கப்படும் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.அதன்படி,மே 2 ஆம் தேதி சென்னை புறநகர் ஏசி ரயில் சேவை 3-ல் இருந்து 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மே 2 முதல் 19 ஆம் தேதி வரை புறநகர் ஏசி ரயில் திரிசூலம் ரெயில் நிலையத்தில் நிற்காது. மே 20 முதல் நின்று செல்லும். பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.




1 More update

Next Story