

தமிழகத்தில் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார். இதற்காக முதல்வர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து கிரிஷ் சோடங்கர் கூறியிருப்பதாவது: காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதற்காக எனது மனமார்ந்த நன்றியை தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்க்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உயரிய முடிவு, கூட்டணி தர்மத்தின் மீதான ஆழ்ந்த அர்ப்பணிப்பையும், கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான பரஸ்பர மரியாதையையும், ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்தும் உயர்ந்த நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. நம்பிக்கை, புரிதல் மற்றும் மக்களுக்கான பொதுவான பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் அரசியல் ஒத்துழைப்பை உருவாக்க முடியும் என்ற வலுவான செய்தியை இது எடுத்துரைக்கிறது.
சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவதன் மூலம் தாம் சொன்ன சொல்லைக் காப்பவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் முதல்வர் விஜய். தனது உறுதிப்பாட்டை மதித்து, வாக்குறுதியில் உறுதியாக நின்றதன் மூலம் கொள்கை சார்ந்த தலைமைத்துவம், அரசியல் நேர்மை மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கான மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த முடிவு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட கூட்டணி அரசியலின் மீது மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.
ராகுல் காந்திக்கும் விஜய்க்கும் இடையேயான அன்பும் மரியாதையும் நிறைந்த உறவு, இந்த கூட்டணியின் ஒற்றுமை உணர்வையும் முன்னேற்ற அரசியலையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது. அரசியலமைப்புச் சட்ட மதிப்புகள், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு, வலிமையான மற்றும் ஒற்றுமையான எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்த முடிவு, கூட்டணியை மேலும் வலுப்படுத்தி, மக்களின் நலனுக்காக அதிக ஒற்றுமையுடனும், வலிமையுடனும், தெளிவான நோக்கத்துடனும் இணைந்து செயல்பட வழிவகுக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.