

சென்னை,
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இது தொடர்பான விசாரணைக்காக கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ந் தேதிகளில் டெல்லி சி.பி.ஐ. முன்பு த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார்.
அன்றைக்கு ஒரு கட்சியின் தலைவராக டெல்லி சென்ற விஜய், தற்போது தமிழகத்தின் முதல்-அமைச்சராக மீண்டும் 'மாஸ் எண்ட்ரி' கொடுக்க இருக்கிறார். இந்த பயணத்தின்போது, பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்து பேச இருக்கிறார்.
ஏற்கனவே, பிரதமர் மோடியை சந்தித்து பேச பிரதமர் அலுவலகத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ச்சியாக பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சிகளிலும், கட்சிப் பணிகளிலும் பங்கேற்று வருவதால் இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது. நேரம் கிடைத்ததும் உடனடியாக முதல்-அமைச்சர் விஜய் டெல்லி செல்ல இருக்கிறார்.
அதே நேரத்தில், டெல்லி பயணத்தின்போது, வெறும் அரசியல் ரீதியான சந்திப்புகள் மட்டுமின்றி, தமிழகத்தின் மிக முக்கிய பொருளாதார தேவைகள் தொடர்பாகவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் வகையில், மாஸ்டர் பிளானுடன் முதல்-அமைச்சர் விஜய் செல்கிறார்.
கடந்த வாரம் தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பாக, நிதித் துறை உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியை சமாளிப்பதுதான் பெரிய சவாலாக இருக்கும் என்பது அவருக்கு தெரியவந்தது.
நிதி நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிப்பதுதான் சரியாக இருக்கும் என்று அதிகாரிகள் முதல்-அமைச்சர் விஜய்யிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரோ, "மத்திய அரசைச் சார்ந்திருக்காமல், இந்த நிதிச் சிக்கலைத் தீர்க்க மாற்று வழிகள் எதுவும் இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த நிதித்துறை அதிகாரிகள், "தற்போது 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே, குறுகிய காலத்திற்குள் மாற்று வழிகளைக் கண்டறிந்து நிதி திரட்டுவது என்பது உடனடியாகச் சாத்தியமில்லை. மத்திய அரசிடம் இருந்து நிதிகளை பெறுவதே சரியானதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளனர்.
அதனை முதல்-அமைச்சர் விஜய்யும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையில், பிரதமர் நரேந்திரமோடியுடனான சந்திப்பின்போது, தமிழகத்திற்கு தேவையான கோரிக்கைகளை கேட்டுப்பெறுவது தொடர்பாக பட்டியல் தயாரிப்பது குறித்த ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கிவிட்டன.
ஒருபுறம் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினாலும், மற்றொரு புறம் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரையும் முதல்-அமைச்சர் விஜய் சந்தித்து பேச இருக்கிறார். டெல்லி வருகை குறித்து ராகுல்காந்தியிடம் தொலைபேசி மூலம் விஜய் தகவல் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.