

காஞ்சிபுரம்,
கோவில் விழாவில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. ஆடித்திருவிழாவின் ஒரு பகுதியாக இரவு சாமி வீதிஉலா நடைபெற இருந்த நிலையில் கோவில் அருகே சாமியை அலங்காரம் செய்யும் பணி நடைபெற்றது. சாமி அலங்காரம் செய்யும் இடத்தில் இரு பிரிவினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபம் அடைந்த நபர்கள் சிலர் கஞ்சா போதையில் நள்ளிரவில் படுநெல்லி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 27), நீலகண்டன் (27) ஆகியோரை மதுபான பாட்டில்களால் அடித்தும், கத்தியால் வெட்டி விட்டும் தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்து போனார்கள். இதனால் படுநெல்லி கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கொலை சம்பவம் குறித்து பொன்னேரிகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொன்னேரிகரை போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்து கஞ்சா மற்றும் மது போதையில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபர்களை தேடும் பணி யில் ஈடுபட்டனர்.
கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சிலர் காஞ்சிபுரம்- அரக்கோணம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு கொலையாளிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலையில் நேற்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பாதுகாப்புக்காக வந்த போலீசார், கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட வைத்தனர்.
இந்நிலையில் கோவில் திருவிழாவின்போது இருவரை வெட்டிக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடுக்கி விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் சில நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.