

சென்னை,
தொகுதி மறுவரையறை சட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆதரவைப் பெறும் நோக்கில், தி.மு.க. மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சமாதானப்படுத்தும் வகையில், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை மசோதாவை தற்காலிகமாக ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-ல் இருந்து 810 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுகிறது.
தொகுதி மறுவரையறையையும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் ஒன்றாக இணைக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
மேலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்கள் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் என்ற அச்சமும் எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
தொகுதி மறுவரையறை மூலம் அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் அதிகரிக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்தால் தொகுதி மறுவரையறை தொடர்பான நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் தெரிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க. தரப்பில் 3 முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அவற்றை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மசோதாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து அக்கட்சி முடிவு செய்யும் எனத் தெரிகிறது.
கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அகில இந்திய அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. இதனிடையே, தி.மு.க. மற்றும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை தங்களது நிபந்தனைகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் இந்த கட்சிகளை சமாதானப்படுத்தும் வகையில் பா.ஜ.க. புதிய ஏற்பாட்டையும் செய்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் கூட்டத் தொடரிலேயே வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை மசோதாவையும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த மசோதாவுக்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறு பான்மை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இவர்களுக்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாக உள்ளன. ஆகவே இந்த மசோதாவை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.