

மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த டிசம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. இதுதொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட கலெக்டர், மாநகர் போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 4-ந்தேதி இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் நடந்த விசாரணை குறித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு நேற்று வெளியாகி உள்ளது. அந்த உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது:-
இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா மற்றும் அறங்காவலர்கள் மணிச்செல்வன், பொம்மதேவன், சண்முக சுந்தரம் மற்றும் ராமையா ஆகியோரை சேர்க்கவும், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யவும் இந்த கோர்ட்டு நினைத்தது.
ஆனால் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் அருகே 5 பேரை பூஜை செய்ய அனுமதிப்பது தொடர்பாக இந்த கோர்ட்டு தெரிவித்த பரிந்துரையை பரிசீலித்து கவனமாக முடிவு எடுக்க வேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட வேண்டும். அதற்கு அவகாசம் வேண்டும் என மேற்கண்டவர்களின் வக்கீல்கள் கோரினர்.
இந்த கோரிக்கையை ஏற்று இந்த அவமதிப்பு வழக்கு விசாரணையை இன்னும் 2 வாரத்துக்கு ஒத்திவைக்கிறேன். அன்றையதினம் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் ஆஜராக வேண்டும்.
இந்த வழக்கு வருகிற 18-ந்தேதி விசாரணைக்கு எடுக்கப்படும்போது காவல்துறை அதிகாரிகள் தகுந்த பதில் அளிக்காவிட்டால் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். மேலும் இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும் என அதிகாரிகளை எச்சரிக்கிறேன். வழக்குகளை ஒத்திவைக்கும் கலாசாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த மாத இறுதிக்குள் ஏதேனும் ஒரு வழியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்படும்.
உயர் அதிகாரிகள் பொறுப்பற்ற கருத்துகளை தெரிவித்தால் அவர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். உயர் பதவிகளை வகிப்பதால் மட்டும் யாரும் விதிவிலக்கு கோர முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.