

சென்னை,
கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த தளர்வுகள் இல்லா ஊரடங்கு முடிவுக்கு வந்தது. கொரோனா சிறிது குறைந்த நிலையில் இன்று முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இ-பதிவு செய்து வாடகை ஆட்டோக்கள், கார்களில் பயணிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சுயதொழில் செய்வோர் கடைகளை திறக்கவும், வெளி இடங்களுக்கு சென்று வேலை செய்யும் வகையிலும் இ-பதிவு இணைய தளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள், தனியார் பாதுகாப்பு சேவையில் உள்ளவர்களுக்கு இ-பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதல் ஒரே நேரத்தில் அதிகமானோர் இ-பதிவு இணையதளத்தில் குவிந்து பதிவு செய்தனர். இதன் காரணமாக கூடுதல் இ-பதிவுக்கு அனுமதி கொடுத்த சிறிது நேரத்திலேயே இணையதளம் முடங்கியது. மொபைல் எண் அளித்தவுடன் ஒ.டி.பி. எண் வருவதில் தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் முயற்சித்தும் இ-பதிவு செய்ய முடியாமல் பலர் ஏமாற்றமடைந்தனர். தற்போது அதைத் சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
முன்னதாக இ-பதிவு செய்வதற்கான இணையதளத்தில் கூடுதலாக வாடகை வாகன பயணத்திற்கு அனுமதி பெறுவதற்கான இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. தனிநபர் மற்றும் குழுவாக சாலை வழிப்பயணம் என்ற லிங்க்கிற்கு சென்றால், ஆட்டோக்கள், கார்கள் ஆகியவை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே செல்வதற்கு பதிவு செய்யலாம்,. இதில் உரிய காரணங்களை பதிவு செய்து அதற்கான இ- பதிவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இன்றுமுதல் ஆட்டோ மற்றும் கார் மூலமாக மூன்று பேர் வரை பயணம் செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான நடைமுறை இ-பதிவு இணையதளத்தில் லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. மருத்துவ காரணம், இறப்பு அல்லது ஈம சடங்குகள், தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு மற்றும் மற்றவை ஆகிய பிரிவுகள் இதில் தரப்பட்டுள்ளன. இதில் உரிய காரணத்தை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.