சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம்

சென்னை தீவுத்திடல் பகுதியில் நடக்க இருந்த பார்முலா 4 கார் பந்தய போட்டிக்கான நேரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம்
Published on

சென்னை,

தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தீவுத்திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை 3.5 கிலோமீட்டர் போட்டிக்குரிய தூரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

19 திருப்பங்கள், அதிவேக நேர் வழிகளுடன் பந்தய பாதை அமைந்துள்ளது. இதையொட்டி சாலையின் இரு புறமும் தடுப்பு சுவருடன், கம்பி அமைக்கப்பட்டுள்ளது. வளைவுகளில் கார்களின் பாதுகாப்புக்காக நிறைய டயர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த போட்டியை ஏறக்குறைய 9 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க உள்ளனர்.

இந்த சூழலில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த எப்.ஐ.ஏ. (FIA) சான்றிதழ் பெற கால நீட்டிப்பு கோரி, சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை தீவுத்திடல் பகுதியில் நடக்க இருந்த கார் பந்தய போட்டிக்கான நேரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக ரவுண்ட் 2 போட்டிகளை தொடங்குவதில் தாமதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கார் பந்தயம் எப்போது தொடங்கும் என்பது குறித்து மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்தநிலையில், தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com