

ராமேஸ்வரம்,
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் யானை ராமலட்சுமி, வீதியுலாவின் போது சுடச்சுட பில்டர் காபியை ருசித்துக் குடித்த சுவாரஸ்யமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி, அம்பாள் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் முன்னணியில் கோயில் யானையான ராமலட்சுமி கம்பீரமாக நடந்து சென்றது. யானை தெற்கு ரத வீதி வழியாகச் சென்றபோது, அங்கிருந்த உணவகத்தில் இருந்து பக்தர் ஒருவர் யானைக்காக பிரத்யேகமாக ஒரு பெரிய டம்பளரில் சுடச்சுட பில்டர் காபியை வாங்கிக் கொடுத்தார்.
பக்தர் கொடுத்த அந்த காபியை, யானைப் பாகன் ராமு பெற்று ராமலட்சுமியிடம் வழங்கினார். வழக்கமாகப் பழங்கள், கரும்புகளைச் சாப்பிடும் ராமலட்சுமி, அன்று பில்டர் காபியைக் கண்டதும் உற்சாகமடைந்தது. தன் தும்பிக்கையால் டம்பளரை லாவகமாக வாங்கி, காபியை வாயில் ஊற்றி மிகவும் ரசித்து ருசித்துக் குடித்தது.
யானை மனிதர்களைப் போல ரசித்துக் காபி குடித்த இந்த விநோதக் காட்சியைக் கண்ட அங்கிருந்த பக்தர்களும் பொதுமக்களும் வியப்படைந்தனர். பலர் இதனைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்ய, தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளைக் குவித்து வருகிறது.