ஆவணி மாத அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

பக்தர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர்.
 ராமேசுவரம்
Published on

ராமேசுவரம்,

தென்னகத்து காசியாக விளங்கும் ராமேசுவரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர், வெளியூர், வட மாநிலங்களில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

ஆவணி மாத அமாவாசை

இக்கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத அமாவாசை, சர்வ அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு, உயிரிழந்த தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பூஜை செய்வது வழக்கம். அதன்படி ஆவணி மாத சர்வ அமாவாசையையொட்டி இன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

முன்னதாக அவர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடியதை தொடர்ந்து கடற்கரையில் அமர்ந்து உயிரிழந்த தங்களது முன்னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர்.

சாமி தரிசனம்

பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமி, அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்திடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com