

மதுரை,
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒரு செங்கல் கூட நடாமல், அண்டை வீடுகளைக் காட்டி 21 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒரு செங்கல் கூட நடாமல், அண்டை வீடுகளைக் காட்டி 21 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய ஊழல் கலாசாரமும், அதிகாரிகளின் மெத்தனப்போக்குமே இத்தகைய முறைகேடுகள் துணிச்சலாக நடைபெறக் காரணமாக இருந்துள்ளன. மத்திய அரசு ஏழை மக்களுக்காக வழங்கும் நிதியைச் சுரண்டுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுக காலத்து இந்த ஊழல் முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், ஆட்சியில் இருக்கும் தவெக அரசு, வெறும் 'ரீல்ஸ்' மோகத்திலும், வெற்று விளம்பர அரசியலிலும் மட்டுமே மூழ்கிக் கிடக்காமல், நிர்வாகத்தில் போதிய கவனம் செலுத்தி, அதே தவறுகள் மீண்டும் தொடராமல் தடுக்க வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்கள் தகுதியுள்ள ஏழைப் பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் தகுதியற்றவர்கள் நிதி பெறுவதைத் தடுக்க, தவெக அரசு மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.