

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டேகவுண்டன் பாளையம் கிராமத்தை சேர்ந்த பூபதி, மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி. இவருக்கு 18 வயதில் ஒரு மகளும் 17 வயதில் ஒரு மகள் என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் இரண்டு மகள்கள் மற்றும் கலையரசி மற்றும் பாட்டி மயிலாத்தாள் ஆகியோர் இருந்துள்ளனர்.
அப்போது அங்கு சென்ற வாலிபர் ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் 17 வயது சிறுமி மற்றும் பாட்டி மயிலாத்தாவை சராமரியாக குத்தியுள்ளார். தடுக்க வந்த சிறுமியின் அக்காவையும் குத்தியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வருவதற்குள் அந்த நபர் தப்பி சென்று விட்டார். பின்னர் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தனர்.
சிறுமியை காதலித்து வந்த நபர் திருமணம் செய்து வைக்க வேண்டுமென வலியுறுத்தியதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் பாட்டி, பேத்தி என 2 பேரையும் ஆயுதத்தால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிறுமியின் பெற்றோர்கள் உறவினர்கள் கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நெகமம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.