

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பஜார் பகுதியில் மதுபோதையில் தகராறு செய்த வாலிபர்களை பிடிக்கச் சென்றபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலத்த காயம் அடைந்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பரதர் தெருவைச் சேர்ந்த ஜான் மகன் ராகேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் எமர்சன் ஆகிய 2 பேரும் ஆத்தூர் பஜார் பகுதியில் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பொன் முனியசாமி (வயது 59) தலைமையிலான போலீசார், தகராறில் ஈடுபட்ட 2 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வர முயன்றனர்.
போலீசாரின் வாகனத்திற்கு பின்னால் தங்களது பைக்கில் வருவது போல வந்த 2 பேரும், ஆத்தூர் பஜார் சாலையில் திடீரென திரும்பி தப்பிச் செல்ல முயன்றனர். இதைக் கண்ட சப்-இன்ஸ்பெக்டர் பொன் முனியசாமி மற்றும் போலீசார், தங்களது பைக்கில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது தப்பியோட முயன்ற வாலிபர்கள் 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டர் பொன் முனியசாமியை ஓடும் பைக்கில் இருந்து பலமாகத் தள்ளிவிட்டு தப்பினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சப்-இன்ஸ்பெக்டர் பொன் முனியசாமிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவர் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தப்பியோடிய எமர்சனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரான ராகேஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.