எம்.ஜி.ஆர். நிறுவிய தியேட்டரை மூடுவது இரட்டை வேடம், துரோகம் டி.டி.வி.தினகரன் கண்டனம்

எடப்பாடி பழனிசாமி அரசின் இரட்டை வேடத்தையும், துரோக குணத்தையும் காட்டுகிறது என டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
எம்.ஜி.ஆர். நிறுவிய தியேட்டரை மூடுவது இரட்டை வேடம், துரோகம் டி.டி.வி.தினகரன் கண்டனம்
Published on

சென்னை,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு, அவர் நிறுவிய தியேட்டரை மூடுவது எடப்பாடி பழனிசாமி அரசின் இரட்டை வேடத்தையும், துரோக குணத்தையும் காட்டுகிறது என டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி நகரின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த கலையரங்கம் தியேட்டர், திருமண மண்டபமாக மாற்றப்படுவது வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்திய கலை நிகழ்ச்சி மூலம் 1968-ம் ஆண்டு ரூ.25 லட்சம் திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழுவுக்கு சேர்ந்தது. மேலும், பல்வேறு நாடக குழுக்கள் நடத்திய நிகழ்ச்சியின் வாயிலாக சேர்ந்த நிதியினால் கம்பீரமாக கட்டி எழுப்பப்பட்ட கலையரங்கம் திரையரங்கத்தை எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது தனது கரங்களால் திறந்துவைத்தார்.

காலங்களை கடந்து நிற்கும், அத்திரையரங்கத்தை மூடிவிட்டு, அதனை திருமண மண்டபமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது எடப்பாடி பழனிசாமியின் அரசு.

ஒருபக்கம் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, இன்னொருபுறம் அவர் நிறுவிய கலைக்கூடத்தை மூடுவது என்பது, இந்த ஆட்சியாளர்களின் இரட்டை வேடத்தையும், துரோக குணத்தையும் தான் காட்டுகிறது. அரசுக்கு சொந்தமாக ஒரு சில தியேட்டர்களே இருக்கும் சூழலில், கலையரங்கம் தியேட்டரை நல்ல முறையில் புதுப்பித்து, ஒரு முன்மாதிரியாக அமைத்திருக்க வேண்டும்.

அதனை விடுத்து ஏற்கனவே ஒரு திருமண மண்டபம் அந்த வளாகத்திலேயே உள்ள நிலையில், அதன் அருகிலேயே 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலையரங்கம் தியேட்டரை, திருமண மண்டபமாக மாற்ற அடிக்கல் நாட்டி உள்ள பழனிசாமியின் அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com