அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில், சகோதரர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், சி.ஐ.டி. காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் சகோதரரின் வங்கிக் கணக்கில் அதிக பரிவர்த்தனை அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே சோதனையின் இறுதியிலேயே சோதனைக்கான முழு விவரம், முக்கிய ஆவணங்கள் ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது தெரியவரும்.
அதைபோல அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் நேருவின் சகோதரர்கள், ரவிச்சந்திரன், மணிவண்ணன், சகோதரி உமா மகேஸ்வரி இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் நேரு இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் நிலையில் ஆதரவாளர்கள் திரண்டு வருகின்றனர்.








