உழவரை தேடி வேளாண்மை திட்டம் மே மாதம் தொடங்குகிறது

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உழவரை தேடி வேளாண்மை திட்டம் மே மாதம் தொடங்க உள்ளது.
உழவரை தேடி வேளாண்மை திட்டம் மே மாதம் தொடங்குகிறது
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் 15-ந் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'உழவரை தேடி வேளாண்மை நலத்துறை திட்டம்' அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், மானியக்கோரிக்கை முடிந்த பிறகு மே முதல் வாரத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேளாண்மைத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 17,116 வருவாய் கிராமங்களிலும் ஓராண்டுக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை சந்திக்கும் இந்த குழுவில், அனைத்து துறைகளின் வட்டார அலுவலர்கள், கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் ஆகியோர் இடம் பெறுவார்கள். இந்த குழுவினர் விவசாயிகளை சந்தித்து வயல்வெளி பாதுகாப்பு, பரப்பு, சாகுபடி, மகசூல் குறித்து உரிய விளக்கம் அளிப்பார்கள். பயிர்களுக்கு தேவையான இடு பொருட்கள், உரம் குறித்தும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்தும் உரிய விளக்கம் அளிக்க இருக்கிறார்கள்.

மாதம் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இந்த முகாம் நடத்தப்பட இருக்கிறது. குறிப்பாக, கோடை கால பயிர்கள், தரிசு நில மேம்பாடு குறித்தும் விளக்கமும், அதற்கான மானியங்களை பெறுவதற்கான முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com