20ம்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட கலெக்டரால் நேரில் பெறப்படும்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20ம்தேதி வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெற உள்ளது.
மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 2025 மே மாதம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட கலெக்டரால் நேரில் பெறப்படும்.
கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யும் வசதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






