தமிழ் அறிஞர்களுக்கு திருவள்ளுவர், காமராஜர், அம்பேத்கர் விருதுகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

தமிழ் அறிஞர்களுக்கு திருவள்ளுவர், காமராஜர், அம்பேத்கர் விருதுகளை சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தமிழ் அறிஞர்களுக்கு திருவள்ளுவர், காமராஜர், அம்பேத்கர் விருதுகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
Published on

சென்னை,

திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரையாற்றினார்.

திருவள்ளுவர் விருது எம்.ஜி. அன்வர் பாட்சாவுக்கும், தந்தை பெரியார் விருது சி.பொன்னையனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது டாக்டர் சி.ராமகுருவுக்கும், பேரறிஞர் அண்ணா விருது பேராசிரியர் மு.அய்க்கண்ணுக்கும், பெருந்தலைவர் காமராஜர் விருது பழ.நெடுமாறனுக்கும், மகாகவி பாரதியார் விருது பாவரசு மா.பாரதி சுகுமாரனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் தியாரூக்கும், தமிழ்தென்றல் திரு.வி.க. விருது முனைவர் கு.கணேசனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது சூலூர் கலைப்பித்தனுக்கும் வழங்கப்பட்டது.

இந்த விருதினை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார். விருது பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் தங்கப்பதக்கத்தையும் அவர் அணிவித்தார். இதையடுத்து அகவை முதிர்ந்த 92 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான அரசாணையை வழங்கி, எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விருது பெற்றவர்கள் சார்பில் சி.பொன்னையன் ஏற்புரை நிகழ்த்தினார். நிறைவாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ரா.வெங்கடேசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

விழாவில், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, பென்ஜமின், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பாடநூல் வாரிய கழக தலைவர் பா.வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com