முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கம்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகளை விருதுநகர் மாவட்ட காவல்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை, மதுரை, தென்காசி, பெங்களூரூ மற்றும் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று அவரை தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டு இருப்பதாக மாவட்ட போலீஸ் நிர்வாகம் தெரிவித்தது. மேலும் சைபர் கிரைம் போலீசார் மூலம் ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி தனது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் அதை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார்.

இந்த சூழலில் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு லுக்-அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேந்திர பாலாஜியை, 9 நாட்களாக 8 தனிப்படைகள் தேடி வரும் நிலையில் அவரின் 6 வங்கிக்கணக்குகளை விருதுநகர் மாவட்ட காவல்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com