கோட்டூர்புரம் தேவாலயத்தில் ரூ.10 லட்சம் பணத்தை திருடிய முன்னாள் ஊழியர் உள்பட 4 பேர் கைது

கோட்டூர்புரம் தேவாலயத்தில் ரூ.10 லட்சம் பணத்தை திருடிய முன்னாள் ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டூர்புரம் தேவாலயத்தில் ரூ.10 லட்சம் பணத்தை திருடிய முன்னாள் ஊழியர் உள்பட 4 பேர் கைது
Published on

சென்னை கோட்டூர்புரம் சர்தார் பட்டேல் சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பக்தர்கள் காணிக்கை பணம் ரூ.10 லட்சம் கடந்த 1-ந்தேதி கொள்ளை போனது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த இந்த பணத்தை கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளையர்கள் அள்ளி சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தேவாலயத்தின் பொருளாளர் பென்சன் ஜெயராஜ் (வயது 73) கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

தேவாலயத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, இந்த தேவாலயத்தின் முன்னாள் ஊழியரான தரமணி பகுதியை சேர்ந்த சகேயு (53) மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் சகேயும், அவருடைய கூட்டாளிகள் அராவா சதாசிவா (51), திருமுரு தனுஷ் (19), போக்குர் கணேஷ் (22) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள பணத்தை மீட்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விசாரணையில், சகேயுவின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் அவர் தேவாலய பணியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நீக்கம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com