சாலையோர உணவகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

சாலையோர உணவகங்களில் சமைப்பதற்காக மழைநீர் வடிகால்களை இடித்து சேதப்படுத்துகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் டி.எஸ்.ஸ்ரீதர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "மண்ணடிப் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமான சாலையோர உணவகங்கள் செயல்படுகின்றன. இந்த உணவகங்களில் சமைப்பதற்காக மழைநீர் வடிகால்களை இடித்து சேதப்படுத்துகின்றனர். சாலையில் வைத்து சமைக்கும்போது, மசாலாப் பொருட்கள் காற்றில் பறந்து சாலையில் செல்வோரின் கண்களில்படுகிறது. இதனால் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சாலையில் கியாஸ் சிலிண்டர்களை வைத்து சமைக்கின்றனர். இதனாலும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். இதுவரை நடவடிக்கை இல்லை" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், ஆக்கிரமிப்பு தொடர்பான இந்த புகாரை குற்ற வழக்காகப் பதிவு செய்ய முடியாது என வாதிடப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ரவீந்திரன், மழைநீர் வடிகால்களை இடித்துச் சேதப்படுத்துவதும், மசாலாப் பொடிகளை வீசி பொதுமக்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும் குற்றமாகும் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, "இந்த மனு தொடர்பாக 2 வாரங்களில் உரிய விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கையை எஸ்பிளனேடு போலீசார் எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com