அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை ரீல்ஸாக வெளியிட்டால்... - எச்சரிக்கை விடுத்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதெல்லாம் 'ரீல்ஸ்' ஆக போய்க்கொண்டு இருப்பதாக உதயநிதி தெரிவித்திருந்தார்.
அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை ரீல்ஸாக வெளியிட்டால்... - எச்சரிக்கை விடுத்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
Published on

சென்னை,

சட்டசபை நிகழ்வுகளை முதலில் நேரலையில் ஒளிபரப்பியது யார்? என்பது பற்றி சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் இடையே விவாதம் அனல் பறந்தது.

'ரீல்ஸ்' ஆக பகிரப்படுகிறது

சட்டசபையில், சட்டசபை நேரலை நிகழ்வுகள் குறித்த விவகாரம் அனல் பறந்தது.

அதன் விவரம் வருமாறு:-

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்:-

சட்டசபையை மிகச்சிறப்பாக வழி நடத்தி செல்கிறீர்கள். எங்களுக்கும் கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகளை கொடுக்கிறீர்கள். எங்களைவிட அதிகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கிறீர்கள்.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்:-

எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாக கொடுக்கிறேன்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி

எதிர்க்கட்சி தலைவர்:-

நான் குறை சொல்லவில்லை. ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், உறுப்பினர்கள் பதில் சொல்லும் போது ஆதாரம் இல்லாமல் பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். ஆனால் நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதைவிட ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் பேசுவதையெல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியிருக்கிறீர்கள். அவை நிகழ்ச்சிகள் நேரலையில் செல்கின்றன.

கேள்விகள் நாங்கள் கேட்டால், அதற்கு நாங்களே ஆச்சரியப்படுவதற்கும், அதிசயப்படும் அளவுக்கும் பதில்கள் கொடுக்கிறார்கள். கேள்விகள் கேட்டால் பதில் சொல்லலாம். இப்போது பாட்டாக பாட ஆரம்பித்துவிட்டார்கள். எங்களுக்கே சில நேரம் சட்டமன்றத்துக்கு வந்திருக்கிறோமா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா? என சட்டசபையில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினாலும் நேரலையில் போய், யூ-டியூப் மற்றும் சமூகவலைதளங்களில் 'ரீல்ஸ்' ஆக கட் செய்யப்பட்டு அதிகமாக பகிரப்படுகிறது. அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதில் அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே இதை மீண்டும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

ஏன் செய்யவில்லை?

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:-

கடந்த 5 ஆண்டுகளில் என்ன ரீல்ஸ் விட்டார்கள்? பாட்டு பாடினார்கள்? நாடாளுமன்றத்தில் இவர்கள் பதவி ஏற்கும்போது பெரியார், அண்ணாவை பற்றி பேசாமல், யார் பெயரை சொல்லி பதவி ஏற்றார்கள் என்பது மக்களுக்கு தெரியும். 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள். ஏன் சட்டசபை நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பவில்லை.

அமைச்சர் ஆனந்த்:-

"இப்போது நாங்கள் சீரியல் பார்ப்பதில்லை. சட்டசபையில் நேரலையில் என்ன நடக்கிறது என்றுதான் பார்க்கிறோம் என்று மார்க்கெட்டில் 70 வயது முதியவர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

அவைக்குறிப்பில் நீக்கினாலும்...

சபாநாயகர்:- கருத்துகளையொட்டி பாட்டு பாடுவதில் எந்த தவறும் இல்லை. எனவே அந்த சூப்பர் சிங்கர் என்ற வார்த்தை அவசியமா?

எதிர்க்கட்சி தலைவர்:-

சட்டசபையில் தி.மு.க. ஆட்சியில் வினா-விடை நேரத்தை முதன்முறையாக நேரலையில் ஒளிபரப்பு செய்தோம். ஆனால் இந்த வினா-விடை நேரத்தை எடுக்க முடியாத நிலையில்தான் இப்போது அரசு இருக்கிறது.

சபாநாயகர்: வினா-விடை நேரத்தை எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் அரசு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வினா-விடை நேரத்தை நடத்த முடியாத நேரத்திலும் உறுப்பினர்களை 55 விதியின் கீழ் கொடுத்திருக்கும் தீர்மானங்களை பேச அனுமதித்து அதற்கு பதிலையும் வழங்குகிறோம்.

எதிர்க்கட்சி தலைவர்:- நான் உங்களை குறைசொல்லவே இல்லை. சட்டசபை வரலாற்றில் நேரலையை செய்தது தி.மு.க. அரசு. இப்போது முழுவதுமாக நேரலை செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்படுவதால் என்னென்ன பிரச்சினை ஏற்படுகிறது என்பதைத்தான் சொல்கிறேன். நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து சிலவற்றை நீக்குகிறீர்கள். ஆனால் அவையெல்லாம் 'ரீல்ஸ்' ஆக போய்க்கொண்டு இருக்கிறது.

முழுமையான நேரலை

சபாநாயகர்:- அவைக்குறிப்பில் நீக்கியதை ஒரு ஊடகம் வெளியிட்டதை தி.மு.க. சார்பில் உரிமைக்குழுவுக்கு அனுப்ப கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அப்படி நீக்கப்பட்ட பிரச்சினை குறித்து எந்தெந்த ஊடகத்தில் வருகிறது என்பதை என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். உரிமைக்குழுவுக்கு அதை அனுப்பி நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.

அமைச்சர் ராஜ்மோகன்:- சட்டசபையில் நடப்பதெல்லாம் மக்களுக்கு தெரிய வேண்டும் என்றுதான் நேரலை தருகிறோம். எதிர்க்கட்சி வரிசை தொடர்ந்து கமாண்ட் அடிப்பது, ஒருமையில் பேசுவதை காட்டவேண்டும். நேரலையை தி.மு.க. ஆட்சியில் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். ஆளுங்கட்சிக்கு சாதகமாக மட்டுமல்லாது, முழுமையான நேரலை என்பது வெற்றி தலைவர் ஆட்சியில் தான் தொடர்ந்து கொடுக்கிறோம். எதிர்க்கட்சி தலைவர் காட்டு... காட்டு... என்று கேட்கிறார். அவருடைய கோரிக்கையை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார்.

எதிர்க்கட்சி தலைவர்:- நான் உங்கள் சார்பில்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நான் பேசியதை நீக்கிவிட்டீர்கள். ஆனால் நேரலையில் சென்றுவிட்டது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?. அவைக்குறிப்பில் இருந்து நீங்கள் எவ்வளவு நீக்கினாலும், அது சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆகி கொண்டே இருக்கிறது.

உரிமைக்குழுவுக்கு அனுப்பியுள்ளேன்

சபாநாயகர்:- ஆதாரம் இல்லாமல் சொல்வதை நீக்குவது நியாயமான மரபு. அதை நீக்குகிறேன். ஆனால் அதை எடுத்து பல்வேறு ஊடகங்களில் வெளியிடுகிறார்கள் என்பதை கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். உரிமைக்குழுவுக்கு அனுப்பி இருக்கிறேன்.

இனி வருங்காலத்தில் நீக்குவது என்பது என்னுடைய தனிப்பட்ட உரிமை. நீக்காமல் பேச முயற்சிப்பதும், ஆதாரங்கள் இல்லாமல் பேசாமல் இருப்பதும் நல்லது. ஆதாரங்களை வைத்துதான் இருதரப்பினரும் பேசவேண்டும். போகிற போக்கில் அள்ளித்தெளித்துவிட்டு போகிற இடம் இல்லை. அரசியல் மேடைகளில் பேசக்கூடிய பேச்சும் அல்ல. அவையின் கண்ணியத்தையும், மக்கள் எதை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்து அனுப்பி இருக்கிறார்களோ அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிற விதத்தில் பேச்சு அமைய வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை

இந்நிலையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “அவை குறிப்பில் நீக்கியதை எந்த வகையில் பயன்படுத்தினாலும், அவையின் மாண்பை குறைப்பதாகவும், சட்டத்தை மீறுவதாகவும் இருக்கும். அது குறித்து உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க கடிதம் வழங்கியுள்ளனர். அந்த கடிதங்கள் என்னுடைய ஆய்வில் உள்ளது. அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com