

பா.ஜ.க. தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்க மாபெரும் வரலாற்றுப் பிழையை இழைத்த காங்கிரஸ் கட்சி.
நேற்று ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றவிருந்த நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் தொடுக்க சதித் திட்டம் தீட்டியதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
இதுநாள் வரையிலும் சொந்தக் கட்சிக்குள் மாறி மாறி அடிதடி போட்டுக் கொண்டிருந்த காங்கிரஸார், இன்று நமது நாட்டின் அதிகாரமிக்க பொறுப்பில் இருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையே குறி வைக்குமளவிற்குத் துணிந்திருப்பது மிகவும் ஆபத்தான குறியீடு. போட்டியிடும் இடங்களில் எல்லாம் தொடர் தோல்வியைச் சந்தித்ததன் விளைவாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, பாராளுமன்றத்திற்குள் அதற்குப் பழி தீர்க்க முயன்ற காங்கிரஸ் எனும் சமூக விரோத அமைப்பை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதப் பிரதமருக்கு எதிராக இப்படியொரு சட்டவிரோத செயல்பாட்டிற்குத் துணை போன அத்தனை காங்கிரஸ் எம்.பி.க்களும் கூண்டோடு பதவி விலக வேண்டும். பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்! இல்லையேல் தமிழக பா.ஜ.க. சார்பாக பெரும் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை காங்கிரஸாருக்கு எச்சரிக்கையாகவே தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.