2018-ல் நடந்த ‘நீட்’ தேர்வில் முறைகேடு: சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர் தந்தையுடன் கைது, சிக்கியது எப்படி? - பரபரப்பு தகவல்கள்

2018-ல் நடந்த ‘நீட்’ தேர்வில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரின்பேரில் சென்னை மருத்துவக்கல்லூரி மாணவரும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர்.
2018-ல் நடந்த ‘நீட்’ தேர்வில் முறைகேடு: சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர் தந்தையுடன் கைது, சிக்கியது எப்படி? - பரபரப்பு தகவல்கள்
Published on

சென்னை,

2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மருத்துவ கல்லூரியில் இருந்தே இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முறைகேட்டில் ஈடுபட்டதாக ஏற்கனவே சென்னையை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யா உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் 2018-ல் நடந்த நீட் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

2018-ல் நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக சென்னை மருத்துவக்கல்லூரி டீன் ஜெயந்தி சி.பி.சி.ஐ.டி போலீசில் புதிய புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக சென்னை மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் தனுஷ்குமாரையும், அவரது தந்தை தேவேந்திரனையும் பிடித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. மாணவர் தனுஷ்குமார் நீட் தேர்வு ரேங்க் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் வந்து தேர்ச்சி பெற்றிருந்தார்.

பாரம்பரியமிக்க சென்னை மருத்துவக்கல்லூரியில் அவர் சேர்க்கப்பட்டார். இவரது தந்தை தேவேந்திரன் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான கருங்கல் ஜல்லிகளை லாரிகள் மூலம் வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஆகும். ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதுவதற்கு தனுஷ்குமாரின் தந்தை தேவேந்திரன் இடைத்தரகர் ஒருவர் மூலம் ரூ.20 லட்சம் லஞ்சமாக கொடுத்துள் ளார்.

தனுஷ்குமாருக்காக ஆள் மாறாட்டம் செய்தவர் பீகார் மாநிலத்தில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் இந்தியில் பரீட்சை எழுதி உள்ளார்.

ஆனால் தனுஷ்குமாருக்கு இந்தி தெரியாது என்பதால், அவர் இந்த வழக்கில் சிக்கிக் கொண்டார். தனுஷ்குமாரும் அவரது தந்தை தேவேந்திரனும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.

இடைத்தரகராக செயல்பட்டவரையும் கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 2018-ம் ஆண்டு நீட் தேர்வில் இதுபோல் மேலும் யாராவது ஆள் மாறாட்டம் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com