கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,500 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,500 கனஅடியாக அதிகரிப்பு
Published on

பென்னாகரம்

காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின் பேரில் கர்நாடக அரசு கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இந்த தண்ணீர் திறப்பு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 7,317 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com