தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.
Published on

பென்னாகரம்

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.

ஒகேனக்கல்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை என்று கூறி அந்த மாநில அரசு அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை நாளுக்கு நாள் குறைத்து வருகிறது. நேற்று முற்றிலுமாக தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதனிடையே நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com