

சென்னை,
மக்களின் பாக்கெட்டை கொள்ளையடிக்கும் இந்த அநீதியை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள் பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
நாடாளுமன்ற வணிக ஆலோசனை குழுவில் (BAC) இந்த மசோதா குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு, எந்தவித விவாதமும் இன்றி தன்னிச்சையாக இந்த மசோதாவைத் திணித்துள்ளது மோடி அரசு.
கடந்த ஜூலை 20 அன்று அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது ஏவப்பட்ட தாக்குதல்கள் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என நாங்கள் குரல் எழுப்பினோம். ஆனால், எங்கள் நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்கத் துணிவின்றி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் பொருட்படுத்தாமல் மசோதாவை அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளனர்.
அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு அடிபணியும் மோடி அரசு, இந்திய ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் யு.பி.ஐ. டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் அதிகாரத்தை பெறுகிறது. இதன் மூலம் இந்தியர்களின் உழைப்பில் வரும் ஒவ்வொரு பணமும் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் கல்லாப்பெட்டிக்குச் செல்ல வழிவகுக்கப்பட்டுள்ளது!
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித் ஷா உடனடியாக பதிலளிக்க வேண்டும்! டிஜிட்டல் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக சாமானிய மக்களின் பணத்தில் மோடி அரசு விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மக்களின் பாக்கெட்டைக் கொள்ளையடிக்கும் இந்த அநீதியை இந்திய மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.