பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. உள்ளதா? - பதில் அளிக்க அன்புமணி ராமதாஸ் மறுப்பு

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.
அ.தி.மு.க. , பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகள் அப்படியே தொடருகிறது. அதேவேளை, பா.ம.க. கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவி வந்தது.
கடந்த சில நாட்களுக்குமுன் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், 'இனி பா.ம.க.வின் தலைவர் நான்தான்' என்றார். ஆனால், கட்சியின் தலைவராக முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருப்பதாகவும், அதனால் நான் தான் கட்சியின் தலைவராக செயல்படுவேன் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை விட்டார். இதனால் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது.
இதனிடையே, செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 11ம் தேதி பா.ம.க. மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு பந்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், இந்த கேள்விக்கு பதில் அளிக்க அன்புமணி ராமதாஸ் மறுத்துவிட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கூட்டணி குறித்த கேள்விகளுக்கு இன்னொரு கூட்டத்தில் பதில் அளிக்கிறேன்' என்றார்.
அதேவேளை, சமூகநீதியை நிலைநாட்டவும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், 69 சதவீத இடஒதுக்கீட்டை நிலைநாட்டவும் பா.ம.க. மாநாடு நடத்தப்படுகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.






