“எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருகிறது” - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோருகளை அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
“எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருகிறது” - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Published on

கோவை,

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றிவந்த மிதுன் சக்ரவர்த்தி (வயது 31), அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பள்ளியில் தொடர்ந்து படிக்க தனக்கு விருப்பமில்லை. வேறு பள்ளியில் சேர்த்து விடுமாறு தனது பெற்றோரிடம் மாணவி கூறி உள்ளார். இதையடுத்து அவரை பெற்றோர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேர்த்தனர். ஆனாலும் ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில்

கோவையைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த 11-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதல் கட்ட விசாரணையில் ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மாணவி இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கு உக்கடம் போலீஸ் நிலையத்தில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், மாணவி தற்கொலைக்கு முன்பு கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அதில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி உள்பட 3 பேரின் பெயர்களை மாணவி குறிப்பிட்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அதை விசாரித்த நீதிபதி ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தியை வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த சூழலில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெயர் நேற்று சேர்க்கப்பட்டது. அவர் மீது போக்சோ சட்டப்பிரிவு 21-ன் கீழ் (புகார் அல்லது வழக்கு பதிவு செய்ய தவறியதற்காக தண்டனை) வழக்கு பதிவு செய்யப்பட் டது.

இதற்கிடையே பள்ளி முதல்வர் மீராஜாக்சன் தலைமறைவானார். அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் இன்று கைது செய்யப்பட்டார். தற்போது போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவியின் பெற்றோரை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது;-

மாணவியின் இந்த இழப்பு தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் இழப்பாக கருத முடியாது. எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் இதற்கான நீதி விசாரணை சரியான முறையில் நடத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

இதில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மாணவி புகார் அளித்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத அந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அரசு பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதை மேலும் விரிவுபடுத்தி தனியார் பள்ளிகளிலும் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படும். இது போன்ற நிகழ்வு இனி எந்த குழந்தைக்கும் நடந்துவிடக்கூடாது என அந்த மாணவியின் தாயார் கூறினார். அதற்கேற்றார் போல் நிச்சயமாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com