

சென்னை,
முதல்-அமைச்சர் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க கோரி சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் முதல்-அமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். உடனே தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கை முன்பு கீழே அமர்ந்து தர்ணா, கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனது இருக்கை முன்பு சூழ்ந்து கொண்டு தொடர்ந்து முழக்கமிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிட்டார். உடனடியாக உள்ளே வந்த அவை காவலர்கள் திமுகவினர் சிலரை குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர். உறுப்பினர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை. அவரை அமைதியாக கூட்டி செல்லுங்கள்' என சபாநாயகர் அறிவுறுத்தினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் பேசியதாவது:-
"கடந்த சனிக்கிழமை அன்று குறைந்த ரத்த அழுத்தம் (Low Pressure) காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதியாக வலியுறுத்தப்பட்டேன். ஆனால், நம்மை எல்லாம் ஆளாக்கிய முதல்-அமைச்சரின் பதிலுரையை கேட்க வேண்டும் என்பதற்காக வருகை தந்தேன். சபையில் நடந்த நிகழ்வுகளால் எனக்கு ரத்த அழுத்தம் உயர்ந்து, மருத்துவரே இல்லாமல் ரத்த அழுத்தம் (Pressure) சரியாகியிருக்கிறது.
முதல்-அமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் விதிகளுக்கு புறம்பாக எதுவும் பேசவில்லை. சட்டமன்றத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்ற மாண்பு திமுகவுக்கு தெரியும்; திமுக உறுப்பினர்கள் அவையை நடத்த முடியாமல் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?; திமுக உறுப்பினர்கள் செய்த செயல்தான் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.