ரெயில் மோதி கபடி வீரர் பலி

அறந்தாங்கி அருகே ரெயில் மோதி கபடி வீரர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் மோதி கபடி வீரர் பலி
Published on

கபடி வீரர் பலி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த ரெத்தினக்கோட்டை நரியங்குடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 25). கபடி வீரரான இவர், கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு அறந்தாங்கி வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் ரெயில் மோதி காளிமுத்து தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் காளிமுத்துவின் உறவினர்களுக்கும் தகவல் கிடைத்தது.

போலீசார் விசாரணை

தகவலின் பேரில், அறந்தாங்கி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பட்டுக்கோட்டை ரெயில்வே போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அறந்தாங்கி போலீசார் காளிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசாதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் காளிமுத்து ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து ரெயில்வே தண்டவாளத்தில் உடலை தூக்கி வீசி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் மோதி கபடி வீரர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com