கரூர்: கூட்டணி பேச்சுவார்த்தையை புறக்கணித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வெளிநடப்பு

கரூர் தி.மு.க அலுவலகத்தில் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையை புறக்கணித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வெளியேறினார்.
கரூர்: கூட்டணி பேச்சுவார்த்தையை புறக்கணித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வெளிநடப்பு
Published on

சென்னை:

தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு உரிய இடங்களை ஒதுக்கி கொடுத்து விட்டு அதிகமான இடங்களில் களம் இறங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாநில நிர்வாகிகளுடன் கூட்டணி கட்சியினர் சந்தித்து பேச்சு நடத்தினார்கள்.

இதில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கி கொடுப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கூட்டணி கட்சியினர் தி.மு.க.வினர் கூறியுள்ள இடங்களை விட கூடுதல் இடங்களை கேட்டு சில இடங்களில் நிர்பந்தம் செய்து வருகிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை மாவட்ட அளவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையடுத்து தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட அளவில் கூட்டணி கட்சியினருடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதும் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்ளின் விவரங்கள் வெளியிடப்பட உள்ளன.

இந்த நிலையில் கரூர் தி.மு.க அலுவலகத்தில் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையை புறக்கணித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வெளியேறினார்.

வார்டு ஒதுக்கீட்டில் திமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை. கரூரில் திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தன்னை வெளியேற சொன்னதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com