நெல்லையில் கவின் கொலை: சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை கே.டி.சி.நகர், மங்கம்மாள் சாலை, அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் கடந்த 27ம் தேதி தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின்செல்வகணேஷ் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நெல்லையில் கவின் கொலை: சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பனியாற்றி வந்தார். இவரை சுர்ஜித் என்பவர் நெல்லையில் வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றார். தனது அக்காவிடம் தொடர்ந்து பேசி வந்ததால், ஆத்திரமடைந்து சுர்ஜித், கவின்குமாரை வெட்டிக்கொலை செய்துள்ளார். காதல் விவகாரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவத்தில் இளம்பெண்ணின் பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் சரவணனும், கிருஷ்ணகுமாரிக்கும் தொடர்பு இருப்பதாக உயிரிழந்த கவின்குமாரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். தொடர்ந்து, திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலை முக்காணியில் கவினின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கவின்குமார் கொலை வழக்கில், கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து முக்காணி பகுதியில் 3 மணி நேரமாக நடந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இருந்த பேதும், எஸ்.ஐ.களாக உள்ள சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் கைது செய்யப்பட்ட பிறகே கொல்லப்பட்ட கவினின் உடலைப் பெற்றுக்கொள்வோம் எனவும் கவின்குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சுர்ஜித் மற்றும் எஸ்.ஐ.க்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து எஸ்.ஐ. தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரியை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஐஜி விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்தார்.

இந்த நிலையில் இன்று நெல்லை மாநகர காவல்துறையினர் சுர்ஜித்தை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக நெல்லை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 27ம் தேதி திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் சரகம், கே.டி.சி.நகர், மங்கம்மாள் சாலை, அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் வைத்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின்செல்வகணேஷ் (வயது 27) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் தொடர்புடைய பாளையங்கோட்டை, கே.டி.சி.நகர், மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த சுர்ஜித்(23) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில் மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட சுர்ஜித்தை, திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி இன்று (30.7.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com