

சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட சம்பா - தாளடி பருவ நெல் மூட்டைகள் லட்சக்கணக்கில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக அரசின் அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும் அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உழவர்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளைக் கூட திமுக அரசு செய்யத் தவறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் 13 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன் அறுவடை தொடங்கிய நிலையில், 60% பரப்பளவில் அறுவடை பணிகள் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள நெல்லும் அடுத்த இரு வாரங்களில் அறுவடை செய்யப்பட்டு விடும். அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக காவிரி பாசன மாவட்டங்களில் 1300-க்கும் கூடுதலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், கடந்த நான்கு நாள்களாக எந்த கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்திற்கான செலுத்திய தொகையை திருப்பித் தர வேண்டும்; தங்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை பணியாளர்கள் கடந்த 25-ம் தேதி முதல் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தம்தான் நெல் கொள்முதல் செய்யப்படாததற்கு காரணம் ஆகும்.
உழவர்கள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும்போது, தங்களுக்குச் சொந்தமான நிலத்தில்தான் அந்த நெல் விளைவிக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான அடங்கல் ஆவணத்தை கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெற்றுத் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும். அதன் பின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதற்கான ஒரு முறை கடவுச்சொல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து பெற்று கிராம நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்தால்தான் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை உழவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகளின் போராட்டத்தால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்படுள்ளன. ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 10 ஆயிரம் மூட்டைகள் வீதம் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக நெல் மூட்டைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இது குறித்து திமுக அரசு எந்தக் கவலையும் பட்டதாகத் தெரியவில்லை.
குறுவை பருவத்தின்போது உழவர்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை குறித்த காலத்தில் கொள்முதல் செய்யத் தவறியதால் கோடிக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாயின. அதே போன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்று உழவர்கள் அஞ்சுகின்றனர். மேலும் நெல் கொள்முதல் தாமதமாகும் நிலையில் ஒவ்வொரு நாளும் நெல்லை உலர்த்தவும், பாதுகாக்கவும் ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டியுள்ளது. நெல் சாகுபடியில் சொல்லிக்கொள்ளும்படி லாபம் கிடைக்காத நிலையில், இத்தகைய எதிர்பாராத செலவுகளால் உழவர்களுக்கு மேலும் இழப்பு ஏற்படும்.
உழவர்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதன் மூலமோ அல்லது மாற்று ஏற்பாடுகளை செய்வதன் வாயிலாகவோ உழவர்களுக்கு அடங்கல் ஆவணத்தை வழங்கச் செய்து அவர்களின் நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், உழவர்கள் நலனில் அக்கறை இல்லாததால்தான் அதை செய்ய திமுக அரசு தவறிவிட்டது.
குறுவை பருவத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்தே இன்னும் உழவர்கள் மீளவில்லை. இன்னொரு பேரழிவையும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளையும் தாங்க உழவர்கள் தயாராக இல்லை. எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்து காவிரி பாசன மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.