

சென்னை,
தமிழக கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மதிப்பிற்குரிய அயோத்திதாச பண்டிதரின் 181ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று
தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தை தமிழகத்தில் நிறுவி, சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கு கல்வி ஒன்றே சிறந்த வழி என்று, அத்தகையவர்களுக்கென சிறப்புப் பள்ளிகளைத் திறக்க வேண்டுமென பாடுபட்டார்.
திருக்குறளுக்கு பௌத்த தர்ம பார்வையில் உரை எழுதினார் மதிப்பிற்குரிய அயோத்தி தாசர் பண்டிதர். ஒரு பைசா தமிழன் என்ற இதழை தொடங்கி மக்கள் மத்தியில் சாதிய ஒழிப்பு, அடையாள மீட்பு பணிகளில் ஈடுபட்டு சேவையாற்றிய மதிப்பிற்குரிய அயோத்திதாச பண்டிதர், எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூக சேவகர் என்று பல்வேறு வகையில் தன்னை தேச மறு மலர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார்.
தமிழ் மொழி மட்டுமின்றி, சம்ஸ்கிருதம், பாலி, ஆங்கில மொழிகளில் மிகுந்த பாண்டித்தியம் கொண்டவராக அவர் திகழ்ந்தார். சித்த மருத்துவம் அறிந்த அவர், மக்களுக்கு இலவச மருத்துவ சேவையையும் வழங்கினார்.
தமிழகத்தில் சமூக நீதி, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு சிந்தனை, சுய மரியாதைக் கருத்துகளின் முன்னோடியாக திகழும் மதிப்பிற்குரிய அயோத்திதாச பண்டிதரின் 181ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று, அவரைப் போற்றி வணங்கிடுவோம் என என் பிரியத்திற்குரிய சகோதர, சகோதரிகளைக் கேட்டு கொள்கிறேன். - கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.