

கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் சுங்கச்சாவடியில் ஆர்.டி.ஓ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், புதுச்சேரியிலிருந்து கார் மூலம் மதுபானம் கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியிலிருந்து கள்ளக்குறிச்சி வழியாக மதுபானங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாடூர் சுங்கச்சாவடி பகுதியில் ஆர்.டி.ஓ அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது, காரின் என்ஜின் பகுதியில் மதுபாட்டில்களை ரகசியமாக மறைத்து வைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதிலிருந்த மதுபானங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் வந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.