பராமரிப்பு பணி: சென்னையில் செப்டம்பர் 9 முதல் மெட்ரோ ரெயில் இயக்கும் இடைவெளியில் மாற்றம்

சென்னையில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் 6:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 9.9.2025 முதல் 19.10.2025 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரெயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.
பராமரிப்பு அட்டவணை மற்றும் மெட்ரோ ரெயில் சேவை மாற்றங்கள் பின்வருமாறு:
• பராமரிப்பு பணி காலம்: 9.9.2025 முதல் 19.10.2025 வரை.
• நேரம்: காலை 5 மணி முதல் 6:30 மணி வரை.
• இந்தக் காலகட்டத்தில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் நேரங்கள்:
• மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் 6:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
• காலை 6:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமும்மின்றி இயங்கும்.
• இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. ரெயில் பாதை பராமரிப்புப் பணிகள், ரெயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம். பயணிகள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது.
பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ ரெயில் சேவையை உறுதிப்படுத்த அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






