

சென்னை,
ஜனநாயக விரோத செயலை காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கோவை மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 17 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு மேயர் ரங்கநாயகி தலைமையில் தொடங்கிய போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காயத்ரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நான்கு மாமன்ற உறுப்பினர்கள் செம்மொழி பூங்கா திட்ட பணிகளில் ரூபாய் 40 கோடி வரை முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு கூறினார்கள்.
இந்த குற்றச்சாட்டை கூறியதும் தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு காயத்ரியை பேச விடாமல் தடுத்தனர். அதை மீறி அவர் பேச முயன்றபோது, பெண் என்றும் பாராமல் அவரது சேலையை பிடித்து இழுத்ததோடு, அவரை தாக்க முயற்சித்தார்கள். அதே நேரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் மீது தி.மு.க. கவுன்சிலர்கள் தள்ளுமுள்ளுகளில் ஈடுபட்டதோடு, தாக்குதலும் செய்ய முற்பட்டார்கள்.
இந்நிலையில் மாமன்ற மேயர், காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மற்றும் நான்கு கம்யூனிஸ்ட் மாமன்ற உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்வதாக அறிவித்துவிட்டு சபையை ஒத்தி வைத்தார். பிறகு பிற்பகலில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் காயத்ரியை மட்டும் இரண்டு மாதத்திற்கு இடைநீக்கம் செய்து அறிவித்தார். கோவை மாமன்ற கூட்டத்தில் நடைபெற்ற ஜனநாயக விரோத செயலை காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.