

சென்னை,
சென்னையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையின் (Integral Coach Factory – ICF) புதிய பொது மேலாளராக மனிஷ் அகர்வால் இன்று பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கு முன்பு ஐசிஎப் பொது மேலாளராக பணியாற்றிய யு. சுப்பா ராவ், தற்போது தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளராக பொறுப்பேற்றுள்ளதை அடுத்து மனிஷ் அகர்வால் இந்த புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
மனிஷ் அகர்வால் 1989-ஆம் ஆண்டு பேட்ச் இந்திய ரெயில்வே மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (IRSME) பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரி ஆவார். ரெயில்வே துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.
ஐசிஎப் பொது மேலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவனத்தில் முதன்மை செயல் இயக்குநராக (மெக்கானிக்கல்) பணியாற்றி வந்தார். மேலும், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளராகவும் (DRM) அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.