

செங்குன்றத்தை அடுத்த விளாங்காடு பக்கம் நியூ ஸ்டார் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவேக் சுகுமார் (வயது 41). இவர் சென்னை ஆர். கே.நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர், நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் மாதவரத்தில் படிக்கும் தனது மகளை அழைத்து வருவதற்காக மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் பின்னால் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராமல் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த விவேக் சுகுமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அகமது அப்துல் காதர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இது தொடர்பாக துரைப்பாக்கத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான சீனிவாசன் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.