

சென்னை,
மேகதாட்டு அணை பிரச்சனையில் தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நீர்வள ஆணையம், 2018 நவம்பர் 22 தேதியிட்டு கர்நாடக மாநிலத்திற்கு அனுமதிக் கடிதம் ஒன்றை அனுப்பியது.
அக்கடிதம், கர்நாடக அரசின் நிறுவனமான பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட கர்நாடக காவிரி நீராவரி நிகம், லிமிடெட்டின் நிர்வாக இயக்குநருக்கு அனுப்பப்பட்டு, “மேகேதாட்டு சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம்” குறித்த விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
உடனடியாக சுப்ரீம்கோர்ட்டை அணுகிய தமிழ்நாடு அரசு 2018 நவம்பர் 22 அன்று மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதிக்கு தடை கோரியது.
மேலும், மத்திய நீர்வள ஆணையம், 2018 நவம்பர் 22 தேதியிட்ட தனது கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கோரியது.
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு 2025 நவம்பர் 13 அன்று தள்ளுபடி செய்தது. தனது உத்தரவில், “கர்நாடக அரசு காவிரி நதிக்குக் குறுக்கே ‘மேகேதாட்டு சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம்’ என்ற பெயரில் அணை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிகிறது,” என்று கோர்ட்டு குறிப்பிட்டது.
மேலும், “தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனு முற்றிலும் தவறான புரிதலின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஏனெனில், இந்த விவகாரத்தை ஆய்வு செய்யும் பொறுப்பு ஏற்கனவே ஒரு நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, அது தற்போது அந்தக் குழுவின் பரிசீலனையில் உள்ளது” என்றும் கோர்ட்டு தெரிவித்தது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நீரை தாங்கள் விரும்பும் வகையில் பயன்படுத்தும் சுதந்திரம் உண்டு என்றும் அமர்வு கூறியது. “ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து மற்ற மாநிலங்களுக்கு தலையிடும் உரிமை இல்லை. ஆனால், அத்தகைய நடவடிக்கைகள் மற்றொரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவை குறைக்கும் நிலை ஏற்பட்டால் மட்டும் தலையீடு செய்யலாம்” என்றும் கோர்ட்டு குறிப்பிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு 2025 டிசம்பர் 11 அன்று சுப்ரீம்கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. அதில், காவிரி தீர்ப்பாயத் தீர்ப்போ அல்லது 2018ஆம் ஆண்டு சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய தீர்ப்போ மேகேதாட்டு திட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும், 2025 நவம்பர் 13 உத்தரவு முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணானது என்பதால் அது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் வாதிட்டது.
பின்னர், இந்த மறுஆய்வு மனு 2026 ஏப்ரல் 15 அன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோரின் தனி அறைகளில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
2026 ஏப்ரல் 13 அன்று, தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, இந்த வழக்கை தனி அறைகளில் அல்லாமல் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரி அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், 2026 மே 26 அன்று வழங்கப்பட்ட இறுதி உத்தரவில், திறந்த நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையை அமர்வு நிராகரித்ததுடன், முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவும் மறுத்தது.
“இந்த மறுஆய்வு மனுவை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. 2025 நவம்பர் 13 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. மறுஆய்வு மனுவின் உள்ளடக்கங்களையும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களையும் கவனமாக ஆய்வு செய்தோம். அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய போதுமான காரணங்கள் எதுவும் இல்லை என்பதில் நாங்கள் திருப்தியடைந்துள்ளோம்” என்று அமர்வு தெரிவித்தது.
மே 26 அன்று காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள மேகேதாட்டு திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்ததை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வரவேற்றார். மேலும், இந்தத் திட்டத்திற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை (DPR) மாநில அரசு சமர்ப்பிக்கும் பணியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“மேகேதாட்டு திட்டம் தொடர்பாக தமிழ்நாடு தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இது கர்நாடகத்திற்கு நல்ல செய்தி. கர்நாடக மக்களின் சார்பில் சுப்ரீம்கோர்ட்டுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அப்போதைய துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான சிவக்குமார், டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
“தமிழ்நாட்டிற்கான 177 டி.எம்.சி நீரை கட்டாயமாக விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சுப்ரீம்கோர்ட்டு ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது. இப்போது இந்தத் திட்டம் குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. திருத்தப்பட்ட DPR-ஐ சமர்ப்பிக்கும் பணியில் நாங்கள் இருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.
கடந்த நவம்பர் 2025-இல், கர்நாடகத்தின் மேகேதாட்டு அணைத்திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க மறுத்த சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை சுப்ரீம்கோர்ட்டு தற்போது தள்ளுபடி செய்துள்ளது.
அப்போது, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை “முன்கூட்டிய மனு” (ஞசநஅயவரசந) எனக் கூறி சுப்ரீம்கோர்ட்டு நிராகரித்திருந்தது.
மேலும், தமிழ்நாட்டின் எதிர்ப்புகள் மற்றும் நிபுணர் அமைப்புகளான காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம், (Cauvery Water Regulation Committee, Cauvery Water Management Authority) ஆகியவற்றின் கருத்துகளைப் பரிசீலித்த பிறகே திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜூன் 19ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தனி தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார்.
“கர்நாடக அரசு மேகதாதுவிலோ, காவிரிப் படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தையோ, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ, அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது.”
இவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டமன்ற தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஒரு திருத்தத்தை முன்மொழிந்திருக்கிறார்.
அதில் கடந்த மார்ச் 2026 இல், மேகதாட்டு அணை தொடர்பாக புதிய நடுவர் மன்றத்தை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முந்தைய திமுக அரசு முன் வைத்ததாகவும், அதையும் சட்டமன்ற தீர்மானத்தில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் தனித் தீர்மானத்தில் அதையும் இணைத்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
1956 நதிநீர் தாவா சட்டப்படிதான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. நடுவர் மன்றம்
2007, பிப்ரவரி 5 இல் அளித்த இறுதித் தீர்ப்பு தொகுதி V, பாகம் -9 இல் பிரிவு XI கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“மேல் பாசன மாநிலம், கீழ்ப் பாசன மாநிலங்களுக்கு (Riparian States) அட்டவணையில் ஒதுக்கியுள்ள தண்ணீரின் அளவை பாதிக்கும்
செயலைச் செய்யக் கூடாது. ஆனால் தொடர்புடைய மாநிலங்கள் தங்களுக்குள் கலந்து பேசி-ஒழுங்குமுறைக் குழுவின் ஒப்புதலைப் பெற்று மேல் பாசன மாநிலம் தண்ணீர் திறந்து விடும் முறையில் மாறுதல் செய்து கொள்ளலாம்”.
இந்தத் தீர்ப்பில் கர்நாடக மாநிலம் தம் விருப்பப்படி புதிய அணைகள் கட்டிக் கொள்ள காவிரி நடுவர் மன்றம் அனுமதிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரீம்கோர்ட்டும் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பையே உறுதி செய்திருக்கிறது.
மேகதாது அணை கட்டவே கூடாது; அவ்வாறு கட்டப்பட்டால் காவிரியில் தமிழ்நாடு பெற்று வருகிற நீர் குறைவதோடு காவிரிப் படுகை மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று தான் இதுவரையில் தமிழ்நாடு சார்பில் நாம் எதிர்த்து வருகிறோம்.
இந்த நிலையில் மேகதாது அணை கட்டுவதா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்க புதிய நடுவர் மன்றம் கோருவதே நாம் இதுவரையில் எடுத்து வந்த நிலைப்பாட்டிற்கு பாதகம் விளைவிக்கும் நடவடிக்கை ஆகும். கர்நாடக மாநிலத்திற்கு இந்தப் பிரச்சினையில் ஒரு வாய்ப்பை அளிப்பதாக அமைந்துவிடும்.
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க முந்தைய அரசு எதன் அடிப்படையில் கோரிக்கை வைத்தது? ஏன் வெளிப்படையான அறிவிப்பு செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.
அது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதித்தும்,விவசாய சங்கங்களின் கருத்துக்களை கேட்டும் முடிவு எடுத்து இருக்க வேண்டும்.
தற்போது மேகதாது அணை பிரச்சனைக்கு புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்ற தீர்மானத்தில் இணைத்து இருப்பது, 2007 இல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு, மற்றும் சுப்ரீம்கோர்ட்டு 2018 இல் அளித்த தீர்ப்புகளை நீர்த்துப் போக செய்து விடும்.
தமிழ்நாடு இதுகாறும் போராடிப் பெற்ற காவிரி நீர் உரிமையை கர்நாடகம் தட்டிப்பறிப்பதற்கு நாமே வழி வகுத்து விடக்கூடாது.
எனவே தமிழ்நாடு அரசு மேகதாட்டு அணைப் பிரச்சனையில் தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் விவசாய சங்கங்களையும் பங்கேற்க செய்து, கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.