புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிட வேண்டும் - ஜவாஹிருல்லா பேட்டி

அப்பகுதியிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கும் செயலாக மாறிவிடும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிட வேண்டும் - ஜவாஹிருல்லா பேட்டி
Published on

சென்னை,

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்பட உள்ள இடம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ரூ.1,200 கோடி செலவில்

கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய், தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக சுமார் ரூ.1,200 கோடி செலவில் பிரம்மாண்டமான நிர்வாக வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் அமைய உள்ள புதிய நிர்வாக வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்பில் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக 26 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட நடவடிக்கைகள்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய நிலங்கள் இந்தத் திட்டத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளன. திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. கட்டிட வடிவமைப்பு, விரிவான திட்ட அறிக்கை, கட்டுமான திட்டமிடல், சுற்றுச்சூழல் அம்சங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய நிர்வாக வளாகம்

புதிய தலைமைச் செயலகம் எந்த இடத்தில் அமையும் என்பது தொடர்பாக நந்தம்பாக்கம், கிண்டி ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. தற்போது பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. கடலை ஒட்டிய முக்கியமான பகுதியில் இந்தப் புதிய நிர்வாக வளாகம் அமைய இருப்பதால், இடத் தேர்வு குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. நிர்வாக ரீதியாக இது முக்கியமான திட்டமாக பார்க்கப்பட்டாலும், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்கள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

போக்குவரத்து நெரிசல்

இதற்கிடையே, புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்கு பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா பேசியதாவது:-

புதிய தலைமைச் செயலகத்தை பட்டினபாக்கத்தில் கட்டவிருப்பதாக த.வெ.க. அறிவித்திருக்கிறது. பட்டினபாக்கம் முதல்-அமைச்சர் விஜய் வீட்டிற்கு அருகில் இருக்கும் பகுதியாக இருக்கலாம், ஆனால் அப்பகுதியிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கும் செயலாக மாறிவிடும். ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம், சட்டமன்றம் இயங்கி வருகிறது. அங்கு ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லை. பட்டினபாக்கத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் இந்தத் திட்டத்தை த.வெ.க. அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com