சிவகாசி அருகே பயங்கரம் நடுரோட்டில் புதுமாப்பிள்ளை எரித்துக் கொலை

புதுமாப்பிள்ளையை கடத்தி வந்து நடுரோட்டில் மோட்டார் சைக்கிளோடு சேர்த்து எரித்துக்கொன்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
சிவகாசி அருகே பயங்கரம் நடுரோட்டில் புதுமாப்பிள்ளை எரித்துக் கொலை
Published on

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்குன்றாபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் செல்வகணேஷ் (வயது 21). கட்டிடத்துக்கு சென்டிரிங் பலகை அடிக்கும் தொழிலாளி. இவருக்கும் வத்திராயிருப்பு புதுப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெண் வீட்டார் நேற்று முன்தினம் செங்குன்றாபுரம் வந்துள்ளனர். பின்னர் பெண் வீட்டாருடன் செல்வகணேஷ் வத்திராயிருப்பு புதுப்பட்டிக்கு சென்று விட்டு, அங்கிருந்து திரும்பினார்.

வீடு திரும்பவில்லை

இரவு 8 மணிக்கு செல்வகணேசுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் செல்போனில் அவரை தொடர்பு கொண்டு பேச முயன்றபோது, சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதைதொடர்ந்து செல்வகணேசின் தாயை தொடர்பு கொண்ட பெண் வீட்டார், செல்வகணேஷ் வீடு திரும்பிவிட்டாரா? என்று கேட்டுள்ளனர். அதற்கு செல்வகணேஷ் இன்னும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீட்டுக்கு எங்காவது சென்று இருப்பார். வீடு திரும்பியதும் போனில் பேச சொல்வதாக கூறி உள்ளனர்.

எரித்துக் கொலை

இந்த நிலையில் நேற்று காலை எரிச்சநத்தம்-விருதுநகர் மெயின் ரோட்டில் கோட்டைஅம்மன் கோவில் அருகில் செல்வ கணேஷ் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதாக அவரது தம்பி நாகராஜூவுக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கு பாதி எரிந்த நிலையில் செல்வகணேஷ் பிணமாக கிடந்துள்ளார். அவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் கருகி கிடந்தது. இது குறித்து நாகராஜ் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்வகணேஷ் உடலை பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கடத்தி வந்து சித்ரவதை

முதற்கட்ட விசாரணையில், புதுமாப்பிளை செல்வகணேஷ் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

செல்வகணேசை மர்ம கும்பல் கடத்தி வந்து அவரை அடித்து சித்ரவதை செய்து, பின்னர் அவரின் மீது மோட்டார் சைக்கிளை போட்டு தீ வைத்து எரித்து கொன்று இருப்பதாகவும், எனவே கொலையாளிகள் சிக்கியவுடன்தான் கொலைக்கான முழு பின்னணி என்ன என்பது தெரியவரும் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com