

சென்னை
சேலத்தை சேர்ந்த மஹேஸ்வரி என்பவரின் 19 வயது மகள் கவுசல்யா காணாமல் போனதாக திருச்செங்கோடு காவல்நிலையத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி காணாமல் போன பெண்ணின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. புகார் கொடுத்து நான்கு மாதங்கள் ஆகியும் ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. நயன்தாரா போன்ற பிரபலமான நடிகைகள் காணாமல் போனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? சாதாரண மக்கள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்காதா?.
மாதம் மாதம் ஊதியம் பெரும் அரசு ஊழியர்கள் அதற்கான வேலையை சரியாக செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் காணாமல் போய்விட்டால் இப்படித்தான் அலட்சியம் காட்டுவீர்களா என கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பான அறிக்கையை வரும் திங்கட்கிழமை காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.