

சென்னை,
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி 1 முதல் தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், தேர்வுகளும் தொடங்கிவிட்டன. பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.
அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் முதற்கட்ட திருப்புதல் தேர்வு நடந்து முடிந்தது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. வருகிற ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு ஏப்ரல் 6 முதல் 9ஆம் தேதிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 6-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 5-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.