

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் சொந்தத் தொகுதியான பெரம்பூரிலேயே கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
மின்வெட்டுப் பிரச்சினை குறித்து முறையிட மின்சார வாரிய அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு உரிய பதிலளிக்க ஆட்கள் இல்லாத அவலநிலையும் நீடிக்கிறது. அவசரக் காலங்களில் பணியாற்ற வேண்டிய பணியாளர் பற்றாக்குறை நிலவுவதும், அதிகாரிகள் மக்களின் அழைப்புகளை ஏற்க மறுப்பதும் தற்போதைய தவெக அரசின் நிர்வாகக் குறைபாட்டைத் தெளிவாகக் காட்டுகிறது. பெரம்பூரில் மட்டுமல்லாது, நான் ஏற்கனவே குறிப்பிட்டு பேசியிருந்ததைப் போல், ஜோசப் விஜய் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திருவள்ளூர் மாவட்டத்திலும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் சமீபகாலமாகவே மின்வெட்டுப் பிரச்சினைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
மக்களின் அடிப்படைத் தேவையான தடையில்லா மின்சாரத்தைக் கூட வழங்கத் தவறிய தவெக அரசையும், முதல்-அமைச்சர் விஜய்யையும் வன்மையாகக் கண்டிப்பதோடு, விளம்பர அரசியலைக் குறைத்துக்கொண்டு, பெரம்பூர் தொகுதி மக்களின் மின்சாரப் பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.