பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: நயினார் நாகேந்திரன் வாழ்த்து

மருத்துவர் தனது அரசியல் பணியை 40 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமாக தொய்வில்லாமல் நடத்தி வந்தவர் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
ராமதாஸ்,நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

மருத்துவர் ராமதாஸ் நல் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டுமென, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சமூகநீதிப்போராளி

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்; சமூகநீதிப்போராளி. மருத்துவர். ராமதாஸ், தான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். தனக்கு பிறகு கட்சியை அன்புமணி ராமதாஸ் வழி நடத்தி செல்வார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

சமூக நீதிக்காக போராடி சிறை சென்றவர்.

மருத்துவர் தனது அரசியல் பணியை 40 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமாக தொய்வில்லாமல் நடத்தி வந்தவர். வன்னியர் சங்கம் தொடங்கி வன்னியர்களின் சமூக நீதிக்காக போராடி சிறை சென்றவர்.

உரிமைப்போராட்டம்

சமூக நீதி, இடஒதுக்கீடு, கிராமப்புற வளர்ச்சி, தரமான கல்வி, பொதுசுகாதாரம், விவசாய முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பூரண மதுவிலக்கு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற தனது கட்சியின் அடிப்படை கொள்கைகளை எந்த சமரசமும் இன்றி போராடி காத்துவருபவர் மருத்துவர் ராமசாமி படையாச்சி, மாணிக்கவேல் நாயக்கர் போன்ற மாபெரும் தலைவர்களுக்கு பின் அரசியல் களப்பணியாற்றி, அகில இந்தியாவின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக , 1980 களில் நடந்த அவரது வன்னியர் உரிமைப்போராட்டம் அரசியல் வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத காவியமாக இருக்கிறது.

போட்டியிட மாட்டேன்

நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ தான் போட்டியிட மாட்டேன் என்று ஆரம்ப கட்ட அரசியலில் அவர் கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை காத்துவரும் பெரும் தலைவர். வன்னியர்கள், தலித்துகளை கொண்டு தன் அரசியல் பயணத்தை தொடங்கி அதற்கு விதையிட்டு அதை ஆலவிருட்சமாக வளர்த்தவர் ராமதாஸ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மீதும் பாரதப்பிரதமர் மோடி மீதும் அளப்பரிய பற்றும், பாசமும் கொண்டவர்.

நம்பிக்கை

இன்று அவரது 88 வது பிறந்தநாளையொட்டி, தனது பாட்டாளி சொந்தங்களிடம் இருந்தும், தனது 40 ஆண்டுளாக தீவிர அரசியல் களத்திலிருந்தும் அவர் விடைப்பெற்று இருப்பது, மனதிற்கு சற்று ஏற்க முடியாது என்றாலும் அவரது தீர்க்கதரிசனமான முடிவு நிச்சயம் இந்திய ஜனநாயகத்திற்கு தகுந்த பலனை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வாழ்த்து

மருத்துவர் நல் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டுமென, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிராத்தனை

கட்சியின் தலைமை பொறுப்பேற்று வழிநடத்த இருக்கும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது தந்தையார் போல, அரசியல் களத்தில் பேரும், புகழும் பெற்று சிறப்பாக பணியாற்ற இந்நேரத்தில் எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்து அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com