

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவு தரிசனத்திற்காக முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகின. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் முருகன் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பணம் வசூலிக்கப்படுவதை கண்டுபிடிக்க பக்தர் போல் கோவிலுக்கு வந்தார். அப்போது முறைகேடான வழியில் தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல சில அர்ச்சகர்கள் ரூ.4,000 கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் நேரடியாக ஜி-பே (GPay) மூலம் ரூ.4,000 பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அவர் அமைச்சர் என்பது தெரியவந்த நிலையில், பணம் பெற்ற அர்ச்சகர்கள் கையும் களவுமாக சிக்கினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்று வந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அமைச்சர் விசாரணை நடத்தினார். ஆய்வின் போது பக்தர்களிடம் விதிமுறைகளை மீறி பணம் வசூலித்தது உள்ளிட்ட பல குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டதுடன், தங்களது தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் எழுதித் தருமாறு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு மற்றும் அதிரடி நடவடிக்கை திருச்செந்தூர் கோவில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விரைவு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்களிடம் முறைகேடாக ரூ.2,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாக சென்னையை சேர்ந்த சண்முகராஜன், ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு, பக்தர்கள் அமைதியான முறையில் வழிபட தேவையான ஏற்பாடுகளை செய்வது அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் கடமை என தெரிவித்தது.
மேலும், பக்தர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கும் அங்கீகாரமற்ற நபர்களை போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தி, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.